மிதக்கும் தோட்டங்கள்!! -FLOATING GARDENS



மிதக்கும் தோட்டங்கள்!! FLOATING GARDENS

பதிவர் வவ்வால் அவர்களின் "ஆழ்நீர் நெற் சாகுபடி- பொக்காலி" எனும் பதிவுக்கு;நான் இட்ட பின்னூட்டத்தில்;தொலைக்காட்சி விவரணச் சித்திரத்தில் பார்த்த மியன்மார் (பர்மா);மற்றும் சில தென் கிழக்காசிய மிக்கொங் நதியின் சதுப்பு நீர்த்தேக்கங்கள் உள்ள நாடுகளிலும் உள்ள "மிதக்கும் தோட்டங்கள்" பற்றிக் குறிப்பிட்டபோது; அவர் தனக்கு அது பற்றித் தெரியவில்லை எனவும் விளக்க முடியுமா? எனவும் கேட்டார்.

படங்களுடன் விளக்க பின்னூட்டத்தில் இயலாதென்பதால் ;யான் ஒரு பதிவாகவே அதை இடுகிறேன்.

நான் அந்த விவரணச்சித்திரத்தில் பார்த்ததையும் புரிந்து கொண்டதையும் இயன்றவரை விபரிக்கிறேன்.

இது குறிப்பாக மிக வெற்றியளித்துள்ளது மியன்மார் INLE LAKE நன்நீர் ஏரியிலேயே!!
அந்த ஏரியில் மரவீடுகள் அமைத்து வாழும் INTHAS எனும் இன மக்கள் கண்டு பிடித்த வழி முறையே இம் மிதக்கும் தோட்டம்.

அந்த ஏரியில் பெருவாரியாக வளரும் மிதக்கும் வகைப் பாசியை சேகரித்து ;ஏரிக்கரையோரம் பரப்பிக் குவிக்கிறார்கள்.





அவற்றின் கீழ்ப்பகுதி உக்கிப் போக மேற்பகுதி காயும் போது இயல்பாக அது மிதக்கும் நிலையடைகிறது.

பின் அதன் மேல் சுமார் அரை அடி உயரத்துக்கு ஏரி வண்டல் மண்ணை அள்ளிப்போட்டுத் தரையாக்கியதும் ,சுமார் 4' ஆழமுடைய தோட்டம் நிலம் தயார் நிலைக்கு வருகிறது.





பின் அதை 4' x 60 'அடிக்கு பெரிய மரம் அரியும் வாளால் அரிந்து ;
துண்டுகளாக்கி இழுத்துச் சென்று ஏரியில் சற்று ஆழமான பகுதியில்
ஊன்றப்பட்ட மூங்கில் தடிகளில் கட்டி;ஒவ்வொன்றுக்குமிடையில் சிறு படகு செல்லக்கூடிய வண்ணம் இடைவெளியும் விட்டுள்ளார்கள்.



இச்சிறு படகில் சென்றே தோட்டப்பராமரிப்பு, மற்றும் சாகுபடி செய்யவேண்டும். மிக இலகுவாக ஓட்டக்கூடிய இந்த சிறு தோணிகளில் முழுக்குடும்பமுமே இதன் பராமரிப்பில் ஈடுபடுவது அழகான காட்சி.

இந்தச் சாகுபடி யாவும் மிதக்கும் சந்தையிலேயே விற்பனையோ பண்டமாற்றோ செய்யப்படுகிறது.
மொத்தமாக வாங்குபவர்களும் இந்தச் சந்தையிலே வாங்கிச் செல்கிறார்கள்.


கோவா, கோவாப்பூ, கத்தரி;வெண்டை;அவரை; பீர்க்கு;; முக்கியமாகத் தக்காளி மற்றும் பூவினங்கள் சாகுபடி செய்கிறார்கள்.


இங்கு சாகுபடியாகும் தக்காளி மியான்மார் முழுதும் விற்பனையாவதுடன் ;பிரசித்தமானதெனவும் கூறினார்கள்.

இத்தோட்டம் சுமார் 15 வருடங்கள் பாவனையின் பின் நீரில் தானே அமிழ்ந்துவிடும்.

அத்துடன் இந்த நீர் நிலையில் உள்ள மீன்களையும் வலைவீசியோ ;விசேட கூடையாலோ பிடிக்கிறார்கள்.


இந்த நீராதரத்தில் அவர்கள் தங்கள் அனைத்து வாழ்வாதாரத்தையும் அமைத்து வாழ்கிறார்கள்.

தாய்லாந்து,கம்பூச்சியா, லாவோஸ் போன்ற நாடுகளிலும் இந்த முறை பயன்பாட்டில் உள்ளது.

இப்போது வங்காள தேசத்திலும் நடைமுறைப் படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இணையத்தில் படித்தேன்.

முதல் முதல் இதைத் தொலைக்காட்சியில் பார்த்த போது, ஈழத்தில் இரணைமடுக் குளத்திலும் ,கிளிநொச்சி,வவுனியாவிலும் கைக்கொள்ளக் கூடிய முறையாக இருக்கென நினைத்தேன்.

எதிர்காலத்தில் வந்தாலும் ஆச்சரியமில்லை.

16 மறுமொழிகள்:

வவ்வால் :சொல்வது

யோகன் மிக்க நன்றி,

உண்மையில் இது பண்டைய பாபிலோனின் தொங்கும் தோட்டத்திற்கு ஒப்பாகும். அற்புதமான ஒரு கண்டுப்பிடிப்பு இந்த மிதக்கும் தோட்டங்கள் அதனை பதிவிட்டு அனைவரும் அறிய தந்தமைக்கு நன்றி!

Anonymous :சொல்வது

அவரை, பீர்க்கங்காய் கூட பயிரிடுகிறார்களா. படங்களுக்கு நன்றி

சிவபாலன் :சொல்வது

யோகன் அண்ணா,

நல்ல பதிவு!

பகிர்வுக்கு மிக்க நன்றி!

வடுவூர் குமார் :சொல்வது

அருமையாக இருக்கு.
நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

வவ்வால்!
"தேவையே கண்டுபிடிப்பின் தாய்" என்பார்கள். நீரிலே பிறந்து நீரிலே வாழ்வதால் அவர்களுக்குத் தேவை
வந்துள்ளது. முதல் பார்த்தபோது என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.
உங்கள் தேடலுக்கு இது பிடிக்கும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

சின்ன அம்மணி!
நான் தொலைக்காட்சிச் விவரணத்தில்; பூசணி; தார்பூசனி; கெக்கரிக்காய் எனப் பல பார்த்தேன். கிழங்கு வகைகள் காணவில்லை. அதிக நீர்ப்பிடிப்பு கிழங்கு வகைக்கு உவப்பில்லை என நினைக்கிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

சிவபாலன்!
சிலருக்கு இது பதிவு பிடிக்கும்; இது எழுத வவ்வால் தான் காரணம்.
அடடா? வவ்வாலுக்கு தோட்டம் பிடிப்பது இயல்பே!

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

வடுவூரார்!
படங்கள் இல்லாமல் இதை விளக்குவது கடினம். படங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கிறது போல்.

குமரன் (Kumaran) :சொல்வது

ஐயா. படங்களுடன் மிக நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

குமரன்!
படங்கள் இல்லாமல் இதைப் புரியவைப்பது சிரமம். நான் தொலைக்காட்டியில் பார்த்தது அதிகம்.
இயன்றவரை படமாக தரவும் முயன்றேன்.

மாயா :சொல்வது

நன்றி அண்ணா . . .

Anonymous :சொல்வது

ஆகா! மிக அருமையான முறை.
இப்படி ஒரு தீவை உருவாக்கிக் கொள்ளலாம் போல் இருக்கிறதே!..

Unknown :சொல்வது

இந்த தோட்டக்கலை முறை புதுமையாக இருக்கிறது. நீர் வளம் கூடுதலாக உள்ள எல்லா இடங்களிலும் இம்முறை பொருத்தி வருமா? புதுத் தகவல்களுக்காக நன்றி.
இதில் நீங்கள் இணைத்துள்ள படங்களனைத்தும் அருமை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

மாயா!
நமது நாட்டில் இரணமடுக் குளத்தில், பராக்கிரமபாகு சமுத்திரம் இதை நடைமுறைப்படுத்தலாம்.
ஏனெனில் பங்களாதேசில் தொடங்கிவிட்டார்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

அனானி அன்பருக்கு!
நமது நாடுகளில் உள்ள நன்னீர் நிலைகளைத் தீவாக்கினால்; நீர்பிரச்சனை வந்துவிடும். எனவே இப்படி மிதக்கும் ;அதாவது காலாகாலம் நீர்த்தேக்கத்துக்கும்; நிலத்தடி நீருக்கும் பிரச்சனை இல்லாத வகையில்
தோட்டங்கள் உருவாக்கி உற்பத்தியை பெருக்குவது மாத்திரமன்றி; நீரிறைப்புக்கு ஆகும் செலவையும் சுருக்கலாம்.இது என் அபிப்பிராயம். தகுந்தவர்கள் சாதக பாதகத்தை ஆய்ந்து கூறவேண்டும்

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

சுல்தான் அண்ணா!
12 மாதமும் நீர் தேங்கியுள்ள ,அடித்துப் பெருக்கெடுத்து ஓடாத நீர் நிலைகள் பொருத்தமானது என நினைக்கிறேன். முருக்கை மர மிதப்பிகளில் வைக்கோல்;பாசி ,இலைதழை,மண் போட்டு இதை உருவாக்கலாம் சுமார் 2 அடி தண்ணீர் இருந்தாலும் போதும் போல உள்ளது.
எந்த நிலையிலும் நீர் நிலைகளை நிரப்பித் தீவாக விட்டால்; மழை நீர் தேங்க வாய்ப்பின்றிப் போய்விடும்.
யாராவது முயன்று பார்க்கலாம்.